சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.42 திருவெஞ்சமாக்கூடல்
பண் - கொல்லிக் கௌவாணம்
எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு
    மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
    குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
1
குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
    குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
    மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
2
வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
    வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்
    குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
3
பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
    படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும்
    அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
    மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
4
துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோடுந்
    தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
    கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
    பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
5
தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
    சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
    புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறா
    முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
6
கடமா களியா னையுரித் தவனே
    கரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
    நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்
    பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7
காடும் மலையுந் நாடு மிடறிக்
    கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
    திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
    பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
8
கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
    கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
    பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
    திளைத்தெற்று சிற்றாறதன்ட கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
    விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
9
வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
    வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
    வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
    வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
    சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com